சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.066
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பங்கம் ஏறு மதி சேர் பண் - தக்கேசி (திருச்சண்பைநகர் (சீர்காழி) ) Audio: https://www.youtube.com/watch?v=ntCr_p77zqk |
3.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம் தமது சிந்தை பிரியாத பண் - சாதாரி (திருச்சண்பைநகர் (சீர்காழி) ) Audio: https://www.youtube.com/watch?v=XwtiN8-Fq5U |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.066  
பங்கம் ஏறு மதி சேர்
பண் - தக்கேசி (திருத்தலம் திருச்சண்பைநகர் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பங்கம் ஏறு மதி சேர் சடையார், விடையார், பலவேதம் அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும் வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின் சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே. | [1] |
சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர், சுடர்க் கமலப் போது அகம் சேர் புண்ணியனார், பூதகண நாதர் மேதகம் சேர் மேகம் அம் தண்சோலையில், விண் ஆர்ந்த சாதகம் சேர், பாளை நீர் சேர், சண்பை நகராரே. | [2] |
மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து, அவனுடைய நிகர்-ஒப்பு இல்லாத் தேவிக்கு அருள்செய் நீல கண்டனார் பகரத் தாரா, அன்னம், பகன்றில், பாதம் பணிந்து ஏத்த, தகரப் புன்னை தாழைப்பொழில் சேர் சண்பை நகராரே. | [3] |
மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட தெய்வர், செய்ய உருவர், கரிய கண்டர், திகழ் சுத்திக் கையர், கட்டங்கத்தர், கரியின் உரியர் காதலால், சைவர், பாசுபதர்கள், வணங்கும் சண்பை நகராரே. | [4] |
கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த குலம் ஆர் கயிலைக்குன்று அது உடையர், கொல்லை எருது ஏறி நலம் ஆர் வெள்ளை, நாளிகேரம், விரியா நறும்பாளை சலம் ஆர் கரியின் மருப்புக் காட்டும் சண்பை நகராரே. | [5] |
மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து, மெய்ம் மால் ஆன சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன்-மேதக்க ஆகரம் சேர் இப்பிமுத்தை அம் தண்வயலுக்கே சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பைநகராரே. | [6] |
இருளைப் புரையும் நிறத்தின் அரக்கன் தனை ஈடு அழிவித்து, அருளைச் செய்யும் அம்மான்-ஏர் ஆர் அம் தண்கந்தத்தின் மருளைச் சுரும்பு பாடி, அளக்கர் வரை ஆர் திரைக்கையால்- தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே. | [7] |
மண்தான் முழுதும் உண்ட மாலும், மலர்மிசை-மேல் அயனும், எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன், மறை ஓதி தண்டு ஆர் குவளைக் கள் அருந்தி, தாமரைத்தாதின் மேல் பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பைநகராரே. | [8] |
போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும், நீதி ஆகக் கொண்டு அங்கு அருளும் நிமலன், இரு-நான்கின் மாதி சித்தர், மாமறையின் மன்னிய தொல்-நூலர், சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே. | [9] |
வந்தியோடு பூசை அல்லாப் போழ்தில் மறை பேசி, சந்திபோதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய அந்தி வண்ணன் தன்னை, அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல் சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே. | [10] |
வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி, பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்; நாதா! எனவும், நக்கா! எனவும், நம்பா! என நின்று, பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.075  
எம் தமது சிந்தை பிரியாத
பண் - சாதாரி (திருத்தலம் திருச்சண்பைநகர் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எம் தமது சிந்தை பிரியாத பெருமான்! என இறைஞ்சி, இமையோா வந்து துதிசெய்ய, வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால், அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன், சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு, மேவு பதி சண்பைநகரே. | [1] |
அங்கம் விரி துத்தி அரவு, ஆமை, விரவு ஆரம் அமர் மார்பில் அழகன், பங்கய முகத்து அரிவையோடு பிரியாது, பயில்கின்ற பதிதான்- பொங்கு பரவைத் திரை கொணர்ந்து பவளத்திரள் பொலிந்த அயலே, சங்கு புரி இப்பி தரளத்திரள் பிறங்கு ஒளி கொள் சண்பைநகரே. | [2] |
போழும் மதி, தாழும் நதி, பொங்கு அரவு, தங்கு புரி புன்சடையினன், யாழ் இன்மொழி, மாழைவிழி, ஏழை இளமாதினொடு இருந்த பதிதான்- வாழை, வளர் ஞாழல், மகிழ், மன்னு புனை, துன்னு பொழில் மாடு, மடல் ஆர் தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என, உந்து தகு சண்பைநகரே. | [3] |
கொட்ட முழவு, இட்ட அடி வட்டணைகள் கட்ட, நடம் ஆடி, குலவும் பட்டம் நுதல், கட்டு மலர் மட்டு மலி, பாவையொடு மேவு பதிதான்- வட்டமதி தட்டு பொழிலுள், தமது வாய்மை வழுவாத மொழியார் சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பைநகரே. | [4] |
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி, பகவன், அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில், நீடு விரை ஆர் புறவு எலாம், தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பைநகரே. | [5] |
பாலன் உயிர்மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன், ஆலும் மயில் போல் இயலி ஆயிழைதனோடும், அமர்வு எய்தும் இடம் ஆம் ஏலம் மலி சோலை இனவண்டு மலர் கெண்டி, நறவு உண்டு இசைசெய, சாலி வயல் கோலம் மலி சேல் உகள, நீலம் வளர் சண்பைநகரே. | [6] |
விண் பொய் அதனால் மழை விழாதொழியினும், விளைவுதான் மிக உடை மண் பொய் அதனால் வளம் இலாதொழியினும், தமது வண்மை வழுவார் உண்ப கரவார், உலகின் ஊழி பலதோறும் நிலை ஆன பதிதான்- சண்பைநகர்; ஈசன் அடி தாழும் அடியார் தமது தன்மை அதுவே. | [7] |
வரைக்குல மகட்கு ஒரு மறுக்கம் வருவித்த, மதி இல், வலி உடை அரக்கனது உரக் கரசிரத்து உற அடர்த்து, அருள்புரிந்த அழகன் இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில், தருக்குலம் நெருக்கும் மலி தண்பொழில்கள் கொண்டல் அன சண்பைநகரே. | [8] |
நீல வரை போல நிகழ் கேழல் உரு, நீள் பறவை நேர் உருவம், ஆம் மாலும் மலரானும், அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன், சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் சாலி மலி, சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில், சண்பைநகரே. | [9] |
போதியர்கள், பிண்டியர்கள், போது வழுவாத வகை உண்டு, பலபொய் ஓதி, அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை; நன்று அது உணர்வீர்! உரைமினோ ஆதி, எமை ஆள் உடைய அரிவையொடு பிரிவு இலி, அமர்ந்த பதிதான், சாதிமணி தெண்திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பைநகரே! | [10] |
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர் சாரின் முரல் தெண்கடல் விசும்பு உற முழங்கு ஒலி கொள் சண்பைநகர்மேல், பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன், உரைசெய் சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர், சேர்வர், சிவலோக நெறியே. | [11] |